பெரும்பாலான கல்லூரி மாணவ, மாணவிகள் ஒரு நிறுவனத்தின் பணியாளராக
தங்கள் வாழ்க்கையை தொடங்கி இருக்கும் சமயம் இது. பலருக்கு அந்த முதல்
வேலையேகூட மொத்த வாழ்க்கையை
தீர்மானிக்கும் வாய்ப்பாக அமையலாம். எனவே,
சிறப்பாக செயல்பட்டு, விரைவில் பணி உயர்வு கிடைத்து வாழ்கையில் செட்டில் ஆக
வேண்டும் என்கிற எண்ணம் இளைஞர்களிடம் இருப்பது நியாயமானதுதான்.

இந்த முயற்சியில் பலர் வேலைப்பளு காரணமாக ஸ்ட்ரெஸ்ஸுக்கு ஆளாகி சில
நேரங்களில் வேலையே வேண்டாம் என்கிற நிலைக்கு தள்ளப்படுவதைப் பரவலாக பார்க்க
முடிகிறது. இந்த ஸ்ட்ரெஸ்ஸுக்கு பலியாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
1. உணவும் உறக்கமும்!
கல்லூரி நாட்களில் உணவுக்கும் உறக்கத்துக்கும் பஞ்சம்
இருந்திருக்காது. ஆனால், வேலைக்கு வந்தபின் இரண்டும் கண்முன் இருக்கும்.
ஆனால், ப்ராஜெக்டை/வேலையை குறித்த நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்கிற
பயத்தில் இரண்டையும் தள்ளி வைத்துவிட்டு வேலையில் மூழ்கிப் போவோம். இது
முற்றிலும் தவறு. உங்கள் உணவு மற்றும் உறக்கம் சரியாக இருந்தாலே ஸ்ட்ரெஸ்
உங்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது போலத்தான். ஒரு நாளைக்கு
குறைந்தபட்சம் மனிதனுக்கு தேவையான 6 முதல் 7 மணி நேர உறக்கம் மிகவும்
அவசியம். நிம்மதியாக தூங்கி எழுவது ஒரு நல்ல தியானத்துக்கு சமம் என்றுகூட
நிரூபித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
அதேபோல் கல்லூரியில் படிக்கும்போது ஒரு சீரான உணவு முறையில்தான் நாம்
சாப்பிட்டிருப்போம். வேலைக்கு வந்த உடன் அந்த சீரான உணவு முறையிலிருந்து
மாறிவிட வாய்ப்புண்டு. பீட்ஸா, பர்கர் போன்ற உணவுகள் சாப்பிடுவது எல்லோரும்
அறிந்ததுதான். ஆனால், வாங்கும் சம்பளத்தை மிச்சப்படுத்த வேண்டும்
என்பதற்காக காலையில் பட்டினி கிடப்பது, திடீரென ஒரு நாள் நண்பனின் ட்ரீட்
என்றவுடன் வயிறு முட்ட சாப்பிடுவது என்று சகட்டுமேனிக்கு நம் உடலின் போக்கை
மாற்றிவிடுகிறார்கள். இப்படி செய்வதால் நம் உடல் எப்படி சீராக இயங்குவது
என்று தெரியாமல் திணறி, பின் ஏதாவது பெரிய நோயில் சென்று முடிகிறது. சரியான
நேரத்தில் சீரான உணவு நம் உடலை சீராக இயங்கவைப்பது மட்டுமின்றி மனதையும்
அமைதியாக வைத்திருக்கும்.
2. இஷ்டப்பட்டு வேலை செய்யுங்கள்!
உங்கள் அலுவலக வேலையை நீங்கள் கஷ்டப்பட்டு செய்வதைவிட இஷ்டப்பட்டு
செய்யுங்கள். ஸ்ட்ரஸ் என்பது உங்களை எட்டிக்கூட பார்க்காது. அப்படியும்
அலுவலக வேலை கொஞ்சம் போராடித்தால் அல்லது லேசான பரபரப்பை உருவாக்கினால்,
சில நிமிடங்கள் மனதை வேறு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இதற்கு எளிய
வழி, உங்களுக்கு பிடித்தவர்களுடன் சில நிமிஷம் பேசுவது அல்லது உங்களுக்குப்
பிடித்த இசையைக் கேட்பது அல்லது காலார ஒரு பூங்காவில் சிறிது நேரம்
நடப்பது. இப்படி செய்வதால் மனமும் உற்சாகம் அடையும். மீண்டும்
சுறுசுறுப்பாக வேலையைப் பார்க்கத் தொடங்கலாம்.
3. ஓய்வு நேரங்களில் ஸ்மார்ட் போன் வேண்டாமே!
நீங்கள் கல்லூரியில் படிக்கும்போது ஒரு நாளைக்கு 5 அல்லது 6 மணி நேரம்
உழைத்திருப்பீர்கள். ஆனால், பணிக்கு சேர்த்தவுடன் உங்கள் வேலை நேரம்
திடீரென இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த மாதிரியான சமயங்களில்
கல்லூரியில் இருந்ததை போல ஸ்மார்ட் போனில் வாட்ஸப், ஃபேஸ்புக் என்று நம்
எனர்ஜியை செலவழிக்காமல், அந்த ஓய்வு நேரத்தில் உங்கள் எனர்ஜியை
அதிகப்படுத்தும் செயல்களை செய்யுங்கள். இது உங்களை எப்போதும்
புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய வைக்கும்.
4. புழம்புவதைவிட செயல்படுங்கள்!
உங்களுக்கு அதிக வேலை கொடுத்துவிட்டார்கள் என்று புழம்புவதைவிட, அந்த
வேலையை எப்படி முடிப்பது என்று திட்டமிடுங்கள். உங்களுக்கு தரப்பட்ட வேலையை
உங்களால் எளிதாக செய்து முடிக்க முடியவில்லை எனில் உங்கள் குழுவில் உள்ள
சீனியர்களிடம் எப்படி அந்த வேலையை சரியாக, குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பது
என்று கேட்டு அறிந்துகொள்ளுங்கள். இது சீனியர்களிடம் நல்ல உறவை தக்க
வைத்துக் கொள்ளவும், குழுத் தலைவரிடம் நல்ல பெயரை வாங்கவும் உதவும்.
5. அலுவலக நேரத்தை திட்டமிடுங்கள்!
பொதுவாக, நேரம் திட்டமிடல் என்ற உடன் காலை 5.30 மணிக்கு எழுவது, 6
மணிக்குள் குளித்துவிட்டு, 6.15 ரயில் பிடிக்க வேண்டும் என்று வழக்கம் போல்
திட்டமிடுவதைவிட, வேலை நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று முழுமையாக
திட்டமிடுங்கள். அலுவலகத்திற்குள் நுழைந்த உடன் கோப்புகளை பிரிப்பது, இன்று
செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிடுவது, நாளைக்கு தள்ளிப் போடக்கூடிய பணிகளை
ஒதுக்குவது, நேற்று செய்த பணிகளை நம் மேலதிகாரிகளிடம் சமர்பிப்பது,
நேற்றைக்கு முதல் நாள் செய்த பணிகளில் ஏதாவது தவறுகள் இருந்து
குறிப்பிடப்பட்டிருந்தால் அவைகளை திருத்துவது என்று பணிகளை வரிசையாக
பட்டியலிட்டுக் கொள்வது உங்களை ஸ்மார்ட்வொர்கராக மாற்றும்.
நல்ல நண்பர்களுடன் பேசுவது ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து விடுபட ஒரு சிறந்த வழி.
வேலைக்கு நம் சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு வந்தபின் நாம் தனிமையில்
இருப்பதை உணர்வோம். இந்தத் தனிமை அலுவலகத்தில் உருவாகும் சின்னப்
பிரச்னையைக்கூட பூதாகரமாக்கிக் காட்டும். இந்தத் தனிமையிலிருந்து சிறந்த
வழி, நல்ல நண்பர்களுடன் நட்பு பாராட்டுவதே. புது இடம், புது சூழ்நிலை, புது
கலாச்சாரம் என்று இருந்தாலும், அலுவலகத்தில் சிலரையாவது நல்ல நண்பர்களாக
மாற்றிக் கொள்ளுங்கள். நமக்கு முன்பே அந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பதால்,
ஒரு வேலையை எப்படி செய்ய வேண்டும், எந்த மாதிரி செய்தால் வேலை விரைவில்
முடிவடையும், எந்த முறையில் செய்தால் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும்
என்று அவர்கள் நமக்கு வழி காட்டுவார்கள்.
7. எமோஷனல் ஃபூல்களாக இருக்காதீர்கள்!
கல்லூரியில் பாடம் நடத்தும் ஆசிரியர் மீது கோபம் வந்தாலோ அல்லது
அனைவர் முன்பும் நம்மை திட்டிவிட்டாலோ, வகுப்பை கட் செய்து வெளியே
சுற்றலாம். ஆனால், அலுவலகம் பிடிக்கவில்லை என்று அடிக்கடி விடுமுறை
எடுத்தால், நம் சம்பளம் கழிவதுடன், உயரதிகாரியிடம் நம் பெயரும் கெட்டுப்
போகும். இது நம் வளர்ச்சிக்கே எதிராக அமையும்.
நமக்கு கோபம் வந்தாலும், அந்த கோபத்தை சரியாக நிர்வகிக்கத் தெரிய
வேண்டும். அப்படி செய்ய கொஞ்சம் யோகாவும், தியானமும் செய்து பார்ப்பது
அவசியம்.
உங்கள் உடலும் உள்ளமும் சிறப்பாக இருந்தால், உங்கள் மனம் பரபரப்பு அடையாது. இதனால் உங்கள் வேலையை எப்போதும் உற்சாகமாக செய்யலாம்!
No comments:
Post a Comment