நீங்கள் ஏதேனும்
ஒரு துறையில் தொழில் தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? பொதுவாக, ஒரு
தொழிலை தொடங்கும்போது அதுபற்றி நன்கு ஆராய்ந்தபிறகே தொடங்குவது வழக்கம்.
ஆனாலும், நாம் சில தவறுகளைச் செய்துவிட வாய்ப்பு உண்டு. இதனால் நாம் பெரிய
அளவில் பணத்தை இழக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாவோம். எனவே, தொழில்
தொடங்கும்முன் ஒருவர் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் பற்றி சென்னை
ஐஐடி-யின் மேலாண்மைத் துறை பேராசிரியர்
தில்லைராஜனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
1, ஒருவர் ஒரு தொழிலை தொடங்கி நடத்தும்போது அதில்
முழுக்கவனத்தையும் செலுத்தாமல் போவதினால், அடுத்தடுத்து தவறு செய்து, பெரிய
அளவில் கையைச் சுட்டுக்கொள்வதற்கு வாய்ப்புண்டு. தொழில் செய்வது
அலுவலகத்தில் வேலை பார்க்கிறமாதிரி அல்ல. தொழிலுக்காக முழுநேரத்தையும்,
உழைப்பையும் தந்தால் மட்டுமே அதில் ஜெயிக்க முடியும்.
2, பணம் இருக்கிறது அல்லது பணம் கடனாகக் கிடைக்கிறது.
அதனால் தொழில் தொடங்க லாமே என்று நினைப்பது தவறு. ஒரு தொழிலைத்
தொடங்கும்முன் அந்தத் தொழிலின் மீதுள்ள ஆர்வம், அனுபவம், பலம் பற்றி
தெரிந்துகொண்டு ஆரம்பிப்பது நல்லது.
3 முழுநேர தொழிலா அல்லது பகுதிநேர தொழிலா என்பதைச்
சரியாகப் புரிந்துகொள்ளாமல் தொழில் தொடங்குவது தவறு. முழுநேர தொழிலாக
இருந்தால், அதற்குத் தேவையான நேரத்தையும் நிதியையும் ஒதுக்கவேண்டும்.
இல்லையெனில், அது உங்கள் வருவாயை சமாளிக்க உதவும் ஒரு பகுதிநேர தொழிலாக
இருக்குமே தவிர, அது உங்களை வளர்ச்சியடையச் செய்யும் தொழிலாக இருக்காது.
4, ஆரம்பத்தில் நிறையப் பணியாளர்களையோ அல்லது
உயர்பதவிகளுக்கான ஆட்களையோ நியமிக்கும்போது சரியான விகிதத்தில் நியமிப்பது
அவசியம். இந்த விகிதம் அதிகமாகும்போது, சம்பளத்துக்காகவே ஒருபகுதி தொகையைச்
செலவழிக்க வேண்டியிருக்கும். எனவே, இந்த விஷயத்தில் அதிகக் கவனத்துடன்
இருப்பது அவசியம். உங்களிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு அதிக தொகையைச்
சம்பளமாக வழங்காமல், குறிப்பிட்ட தொகைக்குப் பதில் பங்குகளாகத் தரும்போது
பொறுப்பு அதிகரிக்கும். நிறுவனத்துக்குச் செலவும் குறையும்.
5. ஒருவரைப் பணியில் அமர்த்தும் போது அவரால் 1:5 என்ற
விகிதத்தில் தொழிலுக்கு வர்த்தகம் வந்து சேரவேண்டும். அதாவது, ஒருவருக்கு
ஒருபங்கு சம்பளம் வழங்கினால், அவரால் தொழிலுக்கு 5. பங்கு வர்த்தகம் வந்து
சேரவேண்டும். இது தவறும்போது தொழிலில் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக, சேவைத் துறையில் இந்த 1:5 விகிதம் கட்டாயம் இருக்க வேண்டும்.

6.உறவினரையோ
அல்லது நண்பரையோ பங்குதாரராகச் சேர்க்கும்போது, அவருக்குப் பங்குகளை
வழங்குவதில் கவனமாக இருக்க வேண்டும். சில சமயங்களில் அவர்களது பங்களிப்பு
குறைவாக இருந்தும், குறைவான பங்குகளை வைத்திருக்கும் ஒரு பங்குதாரரின்
பங்களிப்பு அதிகமாகும்போது தேவையற்ற அதிருப்தியான சூழல் உருவாகும். இந்தத்
தவறை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது நல்லது.
7. மதிப்பிடலில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். நம்
தொழிலின் மீதுள்ள அதிக நம்பிக்கையினால், நம் தொழிலின் மதிப்பை அதிகமாக
நிர்ணயிப்பது தவறு. அனுபவம் வாய்ந்த தொழில்முனைவோர்கள் அதை எளிதில்
கண்டுபிடித்து, நம் தொழிலில் முதலீடு செய்யாமலே போய்விடுவார்கள். எனவே,
சரியான மதிப்பை நிர்ணயித்தால்தான் மற்றவர்கள் நமது தொழிலில் முதலீடு செய்ய
முடியும்!
8. வர்த்தகத்தில் எப்போதும் ஒரு மாற்றுத் திட்டம் தயாராக
வைத்திருக்க வேண்டும். இந்த மாற்றுத் திட்டத்தை ‘பிளான் பி’ என்பார்கள்.
சிலர் ஒரே ஒரு திட்டத்தை மட்டுமே நம்பி இருப்பார்கள். அது தவறு. ஏதோ ஒரு
காரணத்தினால் அந்தத் திட்டம் செயல்படாமல் போகும்போது, பிளான் பி
கைகொடுக்கும்.
9. மார்க்கெட் பற்றிய ஆராய்ச்சியும், துறை சார்ந்த
அறிவும் அவசியம் தேவை. இல்லையெனில் சரியான நேரத்தில், சரியான
வாடிக்கையாளரை சென்றடைய முடியாமல் போய்விடும். மார்க்கெட் ஆராய்ச்சியும்,
துறை சார்ந்த அறிவும் இருந்தால்தான் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதையும்
கணிக்க முடியும்.
10. ஆரம்பத்தில் விளம்பரங் களுக்கு அதிகம் செலவு
செய்யவேண்டியிருந் தாலும், இது ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டாமல் இருக்க
வேண்டும். ஒருவேளை உங்கள் தொழில் சரியாக நடக்கவில்லையெனில், விளம்பரத்துக்
காகச் செலவழிக்கப்பட்ட பணம் வீணாகாமல் இருக்கவே, இந்த விஷயத்தில் கவனமாக
இருக்க வேண்டும்.
நன்றி :
No comments:
Post a Comment